Tuesday 3 May 2011

Central Budget

 பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விலை உயர்வை குறைத்தல் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு 2011-12-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி  மக்களவையில் சமர்ப்பித்தார். அந்த பட்ஜெட்டில் தெரிவித்ததாவது :

 வேளாண்மை

வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு நேரடியாகவே மானியத்தை பணமாக அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. விவசாயத் துறையை வலுப்படுத்த பருப்பு விளையும் 60 ஆயிரம் கிராமங்களில் ரூ.300 கோடி ஒதுக்கப்படும். 60 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பாமாயில் எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.300 கோடி ஒதுக்கப்படும். காய்கறி களைப் பயிரிட ரூ.300 கோடி ஒதுக்கப்படும்.

நலத்திட்டங்கள்   

மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்று வதற்காக ரூ.1,60,887 கோடி ஒதுக்கப் படவுள்ளது. இது இந்த நிதியாண்டைவிட 17 சதவீதம் அதிகமாகும். பாரத் நிர்மாண் திட்டத்திற்கு ரூ.58 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கல்வி    

கல்வி மேம்பாட்டுக்காக ரூ.52,057 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இது நடப்பு நிதியாண்டில்  ரூ.15 ஆயிரம் கோடியாக இருந்தது. மேலும் 9 மற்றும் 10-வது வகுப்பு படிக்கும் எஸ்சி/எஸ்டி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் 40 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுவர். வேலை வாய்ப்புடன் கூடிய மேல்நிலை கல்வி அளிக்கும் திட்டம் 2011-12-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரம்    

சுகாதாரத் திட்டங்களுக்காக ரூ.26,760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கும், விளிம்பு நிலையிலுள்ள தொழிலாளர்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை அளிக்கும் "ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டம்' தற்போது அபாயகரமான தொழில்களான சுரங்கத்துறை, ஸ்லேட், டோலமைட், மைக்கா, ஆஸ்பெஸ்டாஸ் ஆகிய தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள சீரமைக்கப்படாத துறை தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செலவினம்

இந்த பட்ஜெட்டில் திட்டச் செலவுகளுக்காக ரூ.4,41,547 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டைவிட 18.3 சதவீதம் அதிகமாகும். திட்டம் சாராத செலவினங்களுக்கு ரூ.8,16,182 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்டதைவிட இது 10.9 சதவீதம் அதிகமாகும்.

வரி வருவாய்

மொத்த வரி விதிப்புக்கான வருவாய் ரூ.9,32,440 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு மதிப்பீட்டைவிட  இது 23 சதவீதம் அதிகமாகும். மொத்த பற்றாக்குறை ரூ.4,12,817 கோடியாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதமாக இருக்கும். மேட் வரி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மறைமுக வரிகளைப் பொறுத்தவரை 370 பொருட்களுக்கு மத்திய கலால் தீர்வையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.  அவை மதிப்பு கூட்டு வரியின் கீழ் கொண்டுவரப்படும். மீதமுள்ள 240 பொருள்கள் ஜிஎஸ்டி எனப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  நேரடி வரிகளின் மூலமாக ரூ.11,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். சேவை வரியின் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி கூடுதலாக கிடைக்கும். பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அன்னிய நேரடி முதலீடு     

2010-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை அன்னிய நேரடி முதலீடு அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தைவிட குறைவாகவே இருந்தது. நடப்பு நிதியாண்டில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, விமான பயணம் போன்ற பிரிவுகளில் அன்னிய நேரடி முதலீடு உயர்வாக உள்ளது. 2010-11-ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு, மின்சக்தி ஆகிய பிரிவுகளில் அன்னிய நேரடி முதலீடு குறைவாகவே இருந்தது. 

அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை மேலும் தளர்த்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.  அன்னிய முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதியில் முதலீடுகளை செலுத்த அனுமதிக்கப் படுவார்கள். செபி அமைப்பு பதிவு செய்துள்ள பரஸ்பர நிதி அமைப்புகளில் சமபங்கு திட்டங்களில் இவர்கள் முதலீடு செய்யலாம்.  அன்னிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் நம் நாட்டு நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களை முதலீடு செய்ய உச்சவரம்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி இந்நிறுவனங்கள் 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

வங்கி வசதி

நிதி பிரிவில் மேலும் சீர்திருத்தங்களை கொண்டுவர புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும். 

வரும் 2011-12-ஆம் நிதியாண்டில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 73,000 உறைவிடங்களில் வசிக்கும் சுமார் இரண்டாயிரம் பேருக்கு வங்கி வசதிகளை அளிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 20,000 கிராமங்களுக்கு வங்கி வசதிகள் தரப்பட்டதாகவும், மீதியுள்ள கிராமங்களுக்கு அடுத்த நிதியாண்டிலும் அளிக்கப்படும். 

வங்கி கணக்குகளைத் துவக்குவதற்கு மக்களை ஊக்குவிக்கவும், தகவல் பெறச் செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் "சுவாபிமான்' என்ற பல் ஊடக இயக்கம் துவக்கப்பட்டிருக்கிறது.

தனியார் பிரிவினர் வங்கிகள் அமைப்பதற்காக வழங்கப்படும் அனுமதியை மேலும் விரிவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  நடப்பு நிதியாண்டு முடிவதற்குள்ளாக இந்திய ரிசர்வ் வங்கி, தனியார் நிறுவனங்கள் வங்கி அமைப்பது குறித்த வழிமுறைகளை அறிவிக்கும். 

வருமான வரி 

தனிநபர்களுக்கு  விதிக்கப்படும் வருமான வரி உச்ச வரம்பு ரூ.1.60 லட்சத்திலிருந்து ரூ.1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி செலுத்தும் அனைவருக்கும் இதன் மூலம் ரூ.2000 வரை வருமான வரியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் வயது வரம்பு 65-லிருந்து 60 ஆக குறைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.40 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மிக மூத்த குடிமக்களின் வயது வரம்பு 80-தும் அதற்கு மேலாகவும் நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதியோர் ஓய்வூதியத் திட்டம்  

 வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான வயது தற்போதுள்ள 65 லிருந்து 60 வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.  80 வயது மற்றும் அதற்கு அதிகமான வயதானவர்களுக்கு மாதாந்திர  ஓய்வூதியத் தொகை தற்போதைய ரூ.200 லிருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய பணித்திறன் வளர்ச்சி நிதியம்

 வரும் நிதியாண்டில் தேசிய பணித்திறன் வளர்ச்சி நிதியத்திற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டிற்குள் 15 கோடி பணித்திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குவது என்ற தனது இலக்கை நோக்கி தேசிய பணித்திறன் வளர்ச்சி கவுன்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.   இந்த கவுன்சில் ஏற்கனவே ரூ.658 கோடி மதிப்பிலான 26 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்தத் திட்டங்கள் வாயிலாக மட்டும் அடுத்த பத்து ஆண்டுகளில் நான்கு கோடிக்கும் அதிகமாக பணித்திறன் வாய்ந்த நபர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி கழகம்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி கழகத்திற்கு ரூ.20 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது உட்பட நாட்டிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுனங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு மசோதா 

நடப்பாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். மாநில அரசுகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு இந்த மசோதா இறுதி செய்யப்படும்.   

மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள்

 2010-11-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 விழுக்காடு வளர்ச்சி; முந்தைய ஆண்டைவிட 2010-11-இல் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் ஏற்றுமதி 9.6 விழுக்காடு, இறக்குமதி 17.6 விழுக்காடு வளர்ச்சி; 2011-12-இல் இந்தியப் பொருளாதாரம் 9 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ; வரும் நிதியாண்டில் இந்திய பொது கடன் நிர்வாக முகமை மசோதா கொண்டு வரப்படும்;        மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உரம் ஆகியவற்றை சிறப்பாக விநியோகிக்க, வறுமைக் கோட்டுக் கீழ் உள்ள மக்களுக்கு நேரடி ரொக்க மானியம்;  2011-12-இல் பங்கு விலக்கல் முறையில் ரூ.40 ஆயிரம் கோடி திரட்டப்படும்; அன்னிய நேரடி முதலீடு குறித்த கொள்கை மேலும் தளர்த்தப்படும்; வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செபி பதிவு பெற்ற பரஸ்பர நிதி அமைப்புகளில் பணத்தை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்; கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக வெளியிடப்படும் பத்திரங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவார்கள்; தனியார் நிறுவனங்கள் வங்கிகளை அமைக்க அனுமதி; மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டுக்காக ரூ.500 கோடி மதிப்பில் தனி நிதியம்; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்காக இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி மற்றும் நபார்டு வங்கி ஆகியவற்றுக்கு முறையே ரூ.5000 கோடி மற்றும் ரூ.3000 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; வீட்டு வசதிகளுக்காக கொடுக்கப்படும் கடன் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது ; கிராமப்புற வீட்டு வசதி நிதி ரூ.3000 கோடியாக அதிகரிப்பு; தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.7860 கோடியாக நிதி ஒதுக்கீடு; விலங்குகளில் இருந்து கிடைக்கும் புரோடின் சத்தை மேம்படுத்த ரூ.300 கோடி; 25 ஆயிரம் கிராமங்களில் விவசாயிகளுக்கு தீவிர கால்நடை உணவு மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.300 கோடி; விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் ரூ.3,75,000 கோடியிலிருந்து ரூ.4,75,000 கோடியாக அதிகரிப்பு; கிராமங்களுக்காக கடன் வழங்கப்படும் நிதியத்திற்கு 2011-12-ஆம் ஆண்டுக்கு நபார்டு வங்கிக்கு ரூ.10 ஆயிரம் கோடி; இந்த ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புக்கான மசோதா அறிமுகப்படுத்தப்படும்;        உள்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒதுக்கீடு 23.3 சதவீதமாக அதிகரிப்பு; அரசு நிறுவனங்களால் உத்தேசிக்கப்பட்ட வரி இல்லா பத்திரங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு;  நீராவி மற்றும் மின்சார ஊர்திகளுக்கு தேசிய இயக்கம் துவங்கப்படும்; உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள் சார்ந்த சுற்றுச்சூழல் அனுமதி வழங்க அமைச்சர்கள் குழு; தோல் பொருட்கள் உற்பத்திக்கு 7 மாபெரும் தொகுப்புகள் ஏற்படுத்தப்படும்; சமூக துறைக்கான ஒதுக்கீடு 17 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.  பாரத் நிர்மாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு; அடுத்த மூன்றாண்டுகளில் ஊரகப் பகுதிகளுக்கு 2.5 லட்சம் அகன்ற அலைவரிசை தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தப்படும்; இந்திய பத்திர சட்டத்தில் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும்; அறிவுசார் இணையத்தின் மூலம் 1500 உயர் கல்வி நிறுவனங்கள் வரும் மார்ச் 2012-க்குள் ஒருங்கிணைக்கப்படும்;நூதன கண்டுபிடிப்புகளுக்கான தேசிய குழு ஏற்படுத்தப்படும்; தேசிய தொழில் மேம்பாட்டு நிதிக்கு கூடுதலாக ரூ.500 கோடி; சுகாதாரத்திற்கான திட்ட ஒதுக்கீடு 20 சதவீதமாக அதிகரிப்பு;        இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் மேலும் தளர்த்தப்படும்;  பசுமை இந்தியா இயக்கத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு; நதிகளை தூய்மைப்படுத்த ரூ.200 கோடி;       ஜம்மு-காஷ்மீர் மாநில மேம்பாட்டுக்கு ரூ.8000 கோடி ஒதுக்கீடு; வரும் அக்டோபர் மாதம் முதல் நாளன்றுக்கு 10 லட்சம் ஒருங்கிணைந்த பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும்;

2011-12-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிபற்றாக்குறை 4.6 சதவீதமாக இருக்கும் போன்றவை மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment